TRENDING NOW

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே தலைமைச் செயலக ஊழியர்கள் 138 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள், வளாகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அதில் உள்ள பிரிவு அலுவலகங்கள், கூட்ட அரங்கு, அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், மாநகராட்சி அலுவலகம், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாகர்கோவில் கணியாகுளம் அருகே இலந்தையடியில் உள்ள கால்வாயில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் குளிப்பதற்கு படித்துறை உள்ளது. ஆண்கள் குளிப்பதற்காக இருந்த படித்துறையை யாரோ இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், இடித்த படித்துறையை மீண்டும் கட்டித்தர கோரியும் அந்த பகுதி மக்கள் திடீரென அங்குள்ள சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மலைவிளை பாசி தலைமை தாங்கினார்.

தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமரசம் ஆகவில்லை. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து படித்துறை சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்து மறியலை கைவிட்டனர். பொதுமக்கள் மறியல் செய்த சாலையில் அவ்வப்போது தான் வாகனங்கள் செல்லும். இதன் காரணமாக மறியல் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் மலைவிளைபாசி உள்பட 19 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு ரெயில் மூலம் வந்தனர். அங்கிருந்து அவர்களுக்கு கேரள அரசு மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரையும் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கொண்டு வந்து விட்டனர்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி சோதனை மட்டும் நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 19 பேர் களியக்காவிளையில் இருந்து நெல்லை மாவட்டம் களக்காடு செல்ல நாகர்கோவில் வந்தனர்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து களக்காடு செல்வதற்கு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர்களிடம் விசாரணை செய்த போது, மும்பையில் இருந்து வந்ததாகவும், களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை இயக்க மறுத்துவிட்டார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன் அனைவரையும் எஸ்.எல்.பி. பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதும் அனைவரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

மும்பையில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், ஊருக்குள் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் இருந்து வந்தவர்கள் வெளிமாவட்டம் என்று கூறி குமரிக்குள் சுற்றினால் என்ன செய்வது, இந்த குளறுபடியால் மீண்டும் ஊருக்குள் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே சென்னை, மராட்டிய மாநில பகுதியில் இருந்து வருபவர்களிடம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது “வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வரும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் வழியாக வேறு மாவட்டத்திற்கு செல்லும் நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்து அவர்கள் பயண விவரம் மற்றும் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது“ என்றனர்.
குமரி மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தைச் (சி.ஐ.டி.யு.) சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக திரண்டனர். இதற்காக அவர்கள் மாவட்ட சிறை அருகில் இருந்து கலெக்டர் அலுவலக முன்புற வாயில் வரை நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் முன்புற வாயில் கதவையும் போலீசார் அடைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக திரண்டு, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்து விட்டுத் தான் கலைந்து செல்வோம் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்ப முடியாது, தொழிலாளர்கள் சார்பில் 2 அல்லது 3 பேர் உள்ளே செல்ல அனுமதிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் அனைவரிடமும் மனுக்களை சேகரித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை சந்தித்து கொடுத்தனர்.

அந்த மனுக்களில், கட்டிட தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம்தோறும் வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத்தொகை 3 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும், 13 ஆயிரம் தொழிலாளர்கள் நல உதவிகளுக்காக சமர்ப்பித்த நலவாரிய அட்டைகளை அனைவருக்கும் திரும்ப வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்ததாக கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கிராபர்கள் சங்க தலைவர் நீலகண்டன், செயலாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் விதித்திருக்கிற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில் வழக்கம் போல் சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். சாமானிய புகைப்பட, வீடியோ கலைஞர்களுக்கு தொழில் தொடங்கும் காலம் வரையிலும் குறைந்தபட்சம் மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும். மின்கட்டணத்தில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தன்னை கடந்த மே மாதம் 30-ந் தேதி சட்டவிரோதமாக கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து அடித்து துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு தரவேண்டும். எனக்கு நடந்த சட்டவிரோத செயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனித பாதுகாப்புக்கழக நிறுவன தலைவர் ஜெய்மோகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜான் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், இணை செயலாளர் ராமசாமிபிள்ளை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அகிலா, துணை செயலாளர் ஜெயபாரதி, செய்தி தொடர்பாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலால் மக்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கல்வி கட்டணங்கள் யாரும் கட்ட தேவையில்லை என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அரசின் உத்தரவை மதிக்காமல் கொரோனா பேரிடர் காலத்தில் கல்வியை வியாபாரமாக்கி, ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் சில பள்ளிகள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பள்ளிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பியவர்களால் தொற்று அதிகரிக்கிறது.
இதுவரை பொதுமக்களை தாக்கி வந்த கொரோனா, தற்போது தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களையும் தாக்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுகாதார பணியாளர்கள் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்நல சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அங்கு சுகாதார பணியாளர்கள், இன்ஸ்பெக்டரிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முதலாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திலும் தினமும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் அவருடைய ஜீப் டிரைவர், போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கு தொற்று இருக்கும் தகவல் தெரிய வந்ததும் அவர் பணியாற்றிய மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பிளச்சிங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன.

மேலும் அவருடன் பணியாற்றிய போலீசார், குடும்பத்தினர், உறவினர்கள், போலீசாருடன் பழகியவர்கள், சந்தித்துச் சென்றவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினரும், போலீசாரும் சேகரித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் கொ ரோனா தொற்று பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ற இடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த இன்ஸ்பெக்டர் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கும் சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று கோட்டார் போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் குமரியில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த முளகுமூடு அருகில் உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியிலும், அண்டுகோடு அருகில் உள்ள அந்திவிளையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கும், அவருடைய 36 வயது மகனுக்கும் களியக்காவிளை சோதனைச் சாவடியிலும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், 52 வயது ஆண் ஆகியோருக்கு அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கொட்டாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு சுகாதாரத்துறையினரும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் இவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் நேற்று 64 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனவே 63 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குமரியில் நேற்றுமுன்தினம் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சென்னையில் இருந்து வந்திருந்தார். பத்துகாணி பகுதியைச் சேர்ந்த வாலிபர், பத்துகாணி ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளரின் பேரன் ஆவார். இதனால் சுகாதார பணியாளர் மூலமாக பேரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதார பணியாளருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், செங்கல்பட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் திரும்பியுள்ளார். இவருக்கு அந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொற்று ஏற்பட்ட விளாத்திவிளையைச் சேர்ந்த 30 வயது வாலிபர் சவுதியில் இருந்து குமரிக்கு வந்துள்ளார். நாகர்கோவில் அறுகுவிளையைச் சேர்ந்த 47 வயது பெண்ணும், அவருடைய 20 வயது மகனும் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்துள்ளனர்.
கன்னியாகுமரி வாவதுறை மீன் மார்க்கெட்டில் மீன் விற்பது சம்பந்தமாக வாவத்துறை மீனவர்களுக்கும், வெளிப்பகுதி மீனவர்களுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சினை சம்பந்தமாக வாவத்துறை மீனவர்கள் கடந்த 17 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதுவரை சமரச உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இறுதிகட்ட சமரச பேச்சுவார்த்தை நேற்று மதியம் நடந்தது. இரு கிராம மக்களுக்கிடையேயான இந்த அமைதி பேச்சுவார்த்தை கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினர். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகீம் மற்றும் கன்னியாகுமரி ஊர் சார்பில் ஊர் தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் 4 பேரும், வாவத்துறை ஊர் சார்பில் பங்கு பேரவை துணைத் தலைவர் அந்தோணி ஜெபஸ்தியான் தலைமையில் 6 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வாவத்துறை மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று (புதன்கிழமை) முதல் மீன்பிடிக்கச் செல்ல ஒத்துக்கொண்டனர். அதே சமயம் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் பிடித்து வரும் மீன்களை வாவத்துறை கடற்கரையில் தெற்கு பக்கமாக உள்ள பகுதியில் வைத்து வாவத்துறை மீனவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு வலைகளை பிரித்து மீன்களை தரம் பிரித்து மீன் விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும், இரு கிராமத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை, காவல்துறை சார்பில் குழு அமைத்து பிரச்சினை ஏற்படாதவாறு பார்க்க வேண்டும், இரு கிராம மக்களும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த குழுவினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், இதை மீறி இரு கிராமங்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நிரந்தரமாக இரு கிராம மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரிவிளை கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீர் உப்பு சுவையுடன் இருப்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரையே பெரிதும் நம்பியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு தேவையான குடிநீரை அங்குள்ள மக்கள் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் ஒரு வண்டியில் குப்பைகளை அள்ளிக்கொண்டு சென்றனர். இதனை கவனித்த சில பெண்கள் காலி குடங்களுடன் குப்பை வண்டியை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் குழாயில் சில பிரச்சினைகள் இருப்பதால் குடிநீர் முறையாக வழங்க முடியவில்லை, ஓரிரு நாட்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்கப்படும் என செயல் அலுவலர் சசிகலா, பெண்களிடம் தெரிவித்தார்.இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அங்கு வந்த தென்தாமரைகுளம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவி பொன். பன்னீர் செல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி பொருளாளர் சுந்தர்சிங் ஆகியோர் போராட்டக்காரர்களிடம், தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பெண்கள் பேரூராட்சி வண்டியை வழிமறித்து காலி குடங்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.